கண்ணன் பிறந்தான் – எங்கள்
கண்ணன் பிறந்தான் – இந்தக்
காற்று அதை எட்டுத் திசையிலும் கூறிடும்
திண்ணம் உடையான் – மணி
வண்ணம் உடையான் – உயர்
தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்
பண்ணை இசைப்பீர் – நெஞ்சில்
புண்ணை ஒழிப்பீர் – இந்தப்
பாரினிலே துயர் நீங்கிடும் என்று இதை
எண்ணிடைக் கொள்வீர் – நன்கு
கண்ணை விழிப்பீர் – இனி
ஏதும் குறைவில்லை, வேதம் துணையுண்டு
அக்கினி வந்தான் – அவன்
திக்கை வளைத்தான் – புவியார்
இருள் பொய்மைக் கலியை மடித்தனன்
துக்கம் கெடுத்தான் – சுரர்
ஒக்கலும் வந்தார் – சுடர்ச்
சூரியன், இந்திரன், வாயு, மருத்துக்கள்
மிக்க திரளாய் – சுரர்,
இக்கணம் தன்னில் – இங்கு
மேவி நிறைந்தனர், பாவி அசுரர்கள்
பொக்கென வீழ்ந்தார் – உயிர்
கக்கி முடித்தார் – கடல்
போல ஒலிக்குது வேதம் புவிமிசை
சங்கரன் வந்தான் – இங்கு
மங்கலம் என்றான் – நல்ல
சந்திரன் வந்து இன்னமுதைப் பொழிந்தனன்,
பங்கம் ஒன்று இல்லை – ஒளி
மங்குவதில்லை, – இந்தப்
பாரின்கண் முன்பு வானத்திலே நின்று
கங்கையும் வந்தாள் – கலை
மங்கையும் வந்தாள் – இன்பக்
காளி, பராசக்தி அன்புடன் எய்தினள்,
செங்கமலத்தாள் – எழில்
பொங்கும் முகத்தாள் – திருத்
தேவியும் வந்து சிறப்புற நின்றனள்